ஒரு சிறந்த கலை வடிவமானது இனம், மதம் மற்றும் மொழி ஆகியவற்றைக் கடந்து நிற்கும் வல்லமை கொண்டது என்றும், அதன் உண்மையான மொழியாக மனிதநேயமும் ஒற்றுமையுமே திகழ்கின்றன என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். கலாநிதி சுஜாதா அத்தநாயக்க போன்ற சிறந்த கலைஞர்களின் படைப்புகளே தனக்கு இந்த உண்மையை உணர்த்தியதாக அவர் மேலும் குறிப்பிட்டார். கலாநிதி சுஜாதா அத்தநாயக்கவை கௌரவிக்கும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட பாராட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டார். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தினால் நடத்தப்பட்ட 'கலாநிதி சுஜாதா அத்தநாயக்க பிரணாம' என்ற இந்தச் சிறப்புப் பாராட்டு விழா, ஜூலை 28ஆம் திகதி ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் குமாரதுங்க முனிதாச கலையகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய முதன்மை விருந்தினராகப் பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.